காணாமற் போனவர்களுக்கு அரசே பொறுப்பு!

இலங்கையில் காணாமல்போனவர்களின் 22 வது- தேசிய ஞாபகார்த்த தினம் ​நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்தது.

1988-89களில் தெற்கில் காணாமல்போனவர்கள் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என பல பகுதிகளிலும் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வை ஆண்டுதோறும் ஒழுங்குசெய்துவரும் காணாமல்போனவர்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ, அரசாங்கம் காணாமல்போனவர்களுக்காக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கூறினார்.

‘அந்தக் காலத்தில் ஐநாவுக்கு சென்று, சர்வதேசத்துக்கு சென்று, வீதிகளில் பேரணி சென்றுதிரிந்த மகிந்த ராஜபக்ஷ காணாமல்போனவர்களுக்காக நீதி வழங்குவதாகவும் அப்படி இனிமேல் நடக்காது என்றும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். ஆனால் அவர் மறந்துபோன அந்த உறுதிமொழிகள் தான் எங்களிடம் தற்போது உள்ளன. இன்று அதற்காக குரல் கொடுப்பவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டுள்ளனர். நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை நாங்கள் தான் நிலைநாட்டவேண்டும்’ என்று பிரிட்டோ பெர்ணாண்டோ கூறினார்.

இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்துடன் உள்ள முன்னாள் புலிகளின் தளபதிகளும் பொறுக்கூற வேண்டும் என்கின்றனர் உறவினர்கள்.

கடந்த சில ஆண்டுகளில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அரசுதான் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருக்கின்ற பலர் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

இராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினராலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள பலர் இன்னும் காணாமல்போனவர்கள் என்ற நிலைமையிலேயே பதியப்பட்டிருப்பதாக காணாமல்போயுள்ளவர்களின் குடும்பத்தினர் கூறினர்.

கிழக்கு மாகாணத்தில் 2000-களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருப்பவர்கள் தொடர்பில், அக்காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர்களில் பலர் கூறினர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பதாகவும் அதனால் அவர்களின் காலத்தில் நடந்த விடயங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply