வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அனர்த்தம் ஏற்படா பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படாத பகுதிகளில் மக்களுக்குக் காணிகளை வழங்கி அம்மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது வெள்ளம் ஏற்படுகின்ற காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு அக்காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக அவர்களுக்கே வழங்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறியும் நடவடிக்கைகளை அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகள் சகிதம் மேற்கொண்டுவருகின்றார். அந்தடிப்படை யில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் அமைச்சர், அதிகாரிகள் சகிதம் நேற்று முன்தினம் நேரில் விஜயம் செய்தார்.

இச்சமயம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ‘இம்முறைதான் எவ்வித குறைபாடுகளுமின்றி எமக்கு உணவு நிவாரணம் கிடைக்கின்றது. இதற்கு முன்னர் அவ்வாறான நிலைமை இருக்கவில்லை. இதனையிட்டு ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.’

‘அதேநேரம், இந்த வெள்ள அனர்த்தத்தினால் எமது பகுதிகளில் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படக் கூடிய நிலைமை இருந்தும் அதிலிருந்து எம்மையும், எமது உடன்பிறப்புக்களையும் பாதுகாப்பு படையினர் பெரிதும் பாதுகாத்து உதவியுள்ளனர். இதனையிட்டு நாம் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.’

‘என்றாலும், வெள்ளம் ஏற்படாத பிரதேசங்களில் எம்மை நிரந்தரமாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுங்கள்’ என்று மக்கள் கோரினர்.

மன்னார், வுவனியா மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நியாயமான மனிதாபிமானக் கோரிக்கையைக் கருத்தில் எடுத்தே அவர்களை வெள்ளம் ஏற்படாத பிர தேசங்களில் மீளக் குடியமர்த்தவும், தற்போது வசிக்கும் இடங்களை விவசாயத் திற்கென அவர்களுக்கே வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன்’ என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அமைச்சர் மேலும் கூறுகையில், வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களுக்கும் எதுவிதமான குறைகளுமின்றி உணவு நிவாரணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இப்பணிகளுக்கென கடந்த வெள்ளிக்கிழமை வரையும் 213 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கென மேலும் நூறு மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது. அந்நிதி இன்று முதல் பகிர்ந்தளிக்கப்படும். நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கும், அவர்கள் ஊடாக பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதேநேரம், வெள்ளம், மண்சரிவு காரணமாகச் சேதமடைந்துள்ள வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகளும் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. என்றாலும் சேதமடைந்துள்ள சகல வீடுகளுக்கும் அதற்குரிய நஷ்டஈடு வழங்கப்படும். இது தொடர்பான விப ரங்களை திரட்டி அனுப்புமாறும் அதிகாரி களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேற்று விஜயம் செய்ததுடன் நிவாரணப் பொருட்களையும் பகிர்ந்தளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply