புது வருடத்திலும் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் 16 பேர் தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களில் உடல்நிலை சோர்வடைந்த தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிக்குமார், ரமேஷ், காந்தி மோகன், கஜன் ஆகியோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கும் அவர்கள் தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
அவர்களை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்து ஆறுதல் கூறி உடல்நலம் விசாரித்தார். அப்போது உண்ணாவிரதம் இருக்கும் அகதிகள் தங்களது நிலை குறித்து தெரிவித்தனர்.
பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்குள் எந்த திகதியில் வந்தனர் என்ற ஆதாரம் மத்திய அரசிடம் இல்லை. அகதிகளாக வந்த அவர்கள் மீது சாதாரண வழக்குகள் போட்டு சிறப்பு முகாம் என்ற பெயரில் வழக்கு முடிந்த பின்னரும் சிறைக் கைதிகளாக வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்து திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகளும் ஆஸ்பத்திரியில் உள்ள அகதிகளை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இன்றும் அகதிகள் உண்ணாவிரத போராட்டம் 10-வது நாளாக நீடிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply