இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு ஐ. நா. ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : கூட்டமைப்பு கோரிக்கை

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் வன்கொடுமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமானதாகும். இதற்காக ஐ.நா. முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு அல்லாது இலங்கை அரசாங்கத்தின் சாக்குப்போக்குகளுக்கு ஐ.நா. இடமளிக்குமேயானால் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பு மூடி மறைக்கப்பட்டு விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உருப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நேற்று சனல் 4 தொலைக்காட்சியின் ‘யுத்த சூனிய வலயம்” ( நோ பயர் சோன்) என்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின் உண்மைகளை மறைக்கும் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தது. ஆனால் அவை காலத்தின் கட்டாயத்தால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இறுதியாக சனல்௪ வெளியிட்டுள்ள அந்த வீடியோக் காட்சிகள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உண்மைகளை கண்டறிய வேண்டியது கட்டாய தேவையாகும். அவ்வாறு அல்லாது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான வாழ்வையோ, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையோ ஒரு போதும் நிலைநாட்டிவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply