காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார்

இலங்கையில் இந்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பில் இந்தியா, இலங்கை உள்பட 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் கூடி ஆலோசனை நடத்தும்.பரஸ்பர ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஆலோசிக்கப்படும். அதன்படி காமன்வெல்த் அமைப்பின் 23–வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் இந்த மாதம் 10–ந்தேதி முதல் 17–ந்தேதி வரை நடக்கிறது.

இந்த மாநாட்டுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமை தாங்குவார். 50–க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். இதனால் இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். மனித உரிமைகளும் அங்கு மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஈழத்தமிழர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று குரல் கொடுத்தனர்.

இதனை ஏற்று கனடா பிரதமர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில், தான் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார்.

தமிழக சட்டசபையிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதற்காக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா எந்த வகையிலும் பங்கேற்கக்கூடாது, காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க இந்தியா வற்புறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தின. ஆனால் கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் தான் பங்கேற்கப்போவதாக கூறினார்.

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று பகிரங்கமாக கூறினார்.

இலங்கை வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனும், இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஒரு சுமுக அரசியல் தீர்வுகாண முயற்சி எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த மாநாட்டை புறக்கணித்தால் இலங்கை மீதுள்ள செல்வாக்கை இந்தியா இழக்க நேரிடும். இதன் காரணமாக இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் செல்வாக்கு பெற்றுவிடும் என்று கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக, இந்தியா இலங்கை அரசு மீது உள்ள செல்வாக்கை மற்ற நாடுகளிடம் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த உறுதியான முடிவை எடுத்ததாக தெரிகிறது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வுக்கான உடன்பாட்டை ஏற்படுத்தவும், மகிந்த ராஜபக்சே அரசை தொடர்ந்து வற்புறுத்தவும் வேண்டுமானால் இலங்கை உடன் சுமுக உறவு இந்தியாவுக்கு தேவை என்று இந்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும் இந்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மத்தியில் மட்டுமின்றி, உலக தமிழர்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply