சிரியா தலைநகரில் குண்டு வெடித்து 8 பேர் பலி – 50 பேர் படுகாயம்

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகள் குழுக்களுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. போருக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான லெபனன், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்துக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.  இந்த வருடம் முதல் இருதரப்புக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அகதிகளாக வெளியேறியவர்கள் லெபனன்௭,16,000, ஜோர்டன்௫,15,000, துருக்கி௪,60,000, ஈராக்௧,68,000, எகிப்து௧,10,000 என அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும் சிரியாவிலேயே தங்களது வீட்டைவிட்டு வெளியேறிய 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே அகதிகளாக தங்கியுள்ளனர்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கார் குண்டு வெடித்து 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

டமாஸ்கஸ் நகரின் இதயம் போன்ற ஹெஜாஸ் சதுக்கத்தில் வெடித்த இந்த குண்டு மோர்டார் வகையை சேர்ந்தது என்றும் அதிபரை எதிர்க்கும் போராளிகள் குழு தான் இந்த தாக்குதலை நடத்தியது என்றும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெண்கள், குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேபோல், தெற்கு சிரியாவில் உள்ள சுவைதா நகரில் விமானப்படை உளவுப்பிரிவு அலுவலகம் அருகிலும் சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஏதும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply