ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் வழங்கக் கோரியும், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை அமர்வு முன்னர் நாளை விசாரணை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் அசோகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.
3-வது நாளாக ஜெயலலிதா சிறையில் உள்ள நிலையில், அதிமுக எம்.பி.க்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியநாதன் உள்ளிட்ட பலர் சிறை வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவை சந்திக்க அவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
கைதி செய்யப்பட்டவர் சராசரி நபர் அல்ல. அவர் தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை இருந்திருக்கிறார். மேலும் 1 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக எனும் கட்சிக்கு பொதுச் செயலாளராக உள்ளார். ஜாமீன் வழங்க நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்க அவர் தயாராக இருக்கிறார். எனவே இவற்றை கருத்தில் கொண்டும் அவரது வயது, நோய் ஆகியாவற்றை கருதியும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஆஜராகிறார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி. இதற்காக லண்டனில் இருந்து அவர் தாயகம் திரும்புகிறார். திங்கள்கிழமை அவர் இந்தியா வந்தடைகிறார்.
ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லண்டனில் இருந்து திரும்பும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, ஜெயலலிதாவை அவர் அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா அறிவித்தார்.
அவர் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் சசிகலா, சுதாகரன்,இளவரசிக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 10 கோடி அபராதமும் விதித்தார். இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply