ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி இலங்கை அரசு கருத்து
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர் தீர்மானித்துள்ள நிலையில், இவ்வழக்கின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை அறிந்து மாரடைப்பாலும், தீக்குளித்தும் கடந்த 3 நாட்களில் 30 பேர் உயிர் துறந்துள்ளனர். இந்த தீர்ப்பை வரவேற்று ஒரு தரப்பினரும், கண்டித்து மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் என்ற முறையில் இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவின் மனிதஉரிமை மீறலை கண்டித்து தமிழக சட்டசபையில் துணிச்சலாக தீர்மானம் நிறைவேற்றியும், இந்தியாவால் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற்று தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டு, மத்திய அரசை வலியுறுத்தியும் வந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு குறித்து இலங்கையின் தகவல் மற்றும் ஊடகத்துறை மந்திரி கெஹெலிய ரம்புக்வெல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் நாங்கள் (இலங்கை அரசு) விமர்சிக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இந்தியாவுடனான எங்களது தொடர்பு, மத்திய அரசுடன் மட்டும்தான் என்ற நடைமுறையை
எப்போதுமே நாங்கள் கடைபிடித்து வந்துள்ளோம். மாகாண (மாநில) அரசுகளுடன் நாங்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் சார்பில் விளையாடுவதற்காக சென்னை வரவிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களை சென்னைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததும், இதனையடுத்து அந்த போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதும் நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply