கெஜ்ரிவாலை வெளியேற்ற முயற்சி: ஆம் ஆத்மிக்குள் குழப்பம்
கேஜ்ரிவால் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி என்பது போல பிரமிப்பு உருவாகி வருவது கட்சிக்கு கேடு விளைவிக்கும் என்கிற குரல்கள் தற்போது ஒலிக்க துவங்கியுள்ளதால், அக்கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துள்ளன.’பாஞ்ச் சால் கேஜ்ரிவால்’ என்ற கோஷத்துடன் டில்லி சட்டமன்ற தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்ற கட்சியில் தற்போது வேறு விதமான குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமைப் பதவியிலிருந்து, அர்விந்த் கேஜ்ரிவாலை வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் உறுதி செய்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துக்கொண்ட சஞ்சய் சிங், இது குறித்து குறிப்பிடுகையில் சாந்தி பூஷன் அளித்திருந்த பேட்டி ஒன்றை சுட்டிக்காட்டினார்.
அதில் சாந்தி பூஷன், கேஜ்ரிவாலை தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவியில் யோகேந்திர யாதவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிதிக்கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும், கட்சிக்குள் ஜனநாயக முறையை வலுப்படுத்த வேண்டும், அர்விந்த் கேஜ்ரிவால் மட்டுமே கட்சியின் தேசிய தலைமை மற்றும் டில்லி முதல்வர் என இரட்டை பதவி வகிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரங்களால் அக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
ஆனால் தொடர்ந்து வெளியாகும் இச்செய்திகள் அனைத்தும், டில்லியில் பேராதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு கற்பனையான நெருக்கடியை உருவாக்க நடத்தப்படும் சதி தான் என்று அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் யோகேந்திர யாதவ் இன்று தெரிவித்துள்ளார்.
வரும் 4 ஆம் தேதியன்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. செயற்குழு தான் அக்கட்சியில் அதிக சக்தி வாய்ந்தது என்பதால், இந்த கூட்டத்தில் தான் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply