பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரது அடிப்படை உரிமை மீறல் மனுமீது 12 இல் விசாரணை
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி இடம்பெற்றதாக கூறி தம்மை கைதுசெய்து சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் அடைத்துள்ளதாகவும் அதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ உள் ளிட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் 12, 24 , 25 ஆகிய தினங்களில் தொடர்ந்தும் விசாரணை செய்யப்படவுள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நீதியரசர்களான பிரிய சாடெப், ரோஷனி அமரசிங்க ஆகியோர் முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதிவாதிகளின் வாதங்களுக்காக மேற்படி திகதி குறிப்பிடப்பட்டது.
பிரதமர், அமைச்சரவை, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 45 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, செயலாளர் கலாநிதி நிஹால் ஜெயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பந்துல திலகசிறி ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் முதன்முறையாக நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர்களான பஷில் ராஜபக் ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி.சில்வாவும் முன்னாள் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரீயும், பணிப்பாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி.சில்வாவும் மேலதிக பணிப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜெயவர்த்தனவும் மன்றில் ஆஜராகியிருந்தனர். நேற்றுமுன்தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பஷில் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி.சில்வா வாதங்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகள் நேற்றுமுன்தினம் தமது வாதங்களை முன்வைத்தனர்.
பொலிஸ் கட்டளை சட்டத்தின் 55 ஆவது நிதிப்பிரிவின் கீழ் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவை உருவாக்க முடியாது எனவும் அதனால் உருவாக்கப்பட்டுள்ள நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு சட்டவிரோதமானது எனவும் அவர்கள் வாதங்களை முன்வைத்தனர். அத்துடன் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள நிதிக்குற்றப்பிரிவால் அரசியல் பழிவாங்கல் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணிகள் அந்த பொலிஸ் பிரிவு நிறுவப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள சில விடயங்களை சுட்டிக்காட்டி தமது வாதத்தை முன்வைத்தனர்.
குறிப்பாக பிரதமரின் கீழுள்ள உப குழுவொன்று நிதிக்குற்றம் தொடர்பாக முறைப்பாடுகளை ஏற்பதுடன் விசாரணை செய்யும் முறைப்பாடு தெரிந்தெடுத்து பொலிஸ் பிரிவுக்கு அனுப்புதல், கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகளை தேடுதல் ஆகியன தொடர்பில் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களை சுட்டிக்காட்டி அரசியல் பழிவாங்கலுக்காகவே குற்றப்புலானாய்வு பிரிவு இயங்கி வருவதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தினர்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் தமது கட்சிக்காரர் கைதுசெய்யப்படும் முன் கடுவலை நீதிவானின் கீழ் கைது தொடர்பிலான அறிவித்தல் வழங்கப்பட்டு அவர் நீதிமன்றில் இரவு 10.00 மணியளவில் விசாரணைக்கு தயாராகவே இருந்ததாகவும் சந்தேகநபர்கள் மன்றிற்கு அழைத்து செல்லப்படும் முன்னரேயே சிறைச்சாலை பஸ் வண்டி நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டமையும் தமது கட்சிக்காரர்களின் கைது திட்டமிடப்பட்டது என்பதற்கு சிறந்த உதாரணம் எனவும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
முன்னைய வழக்கு தீர்ப்பு பலவற்றை உதாரணம் காட்டி வாதாடிய குறித்த சட்டத்தரணிகளின் வாதம் மாலை 4.55 மணிவரை நீடித்தது. இந்நிலையில் நேற்றைய தினத்தோடு மனுதாரர்தரப்பு வாதங்கள் நிறைவுக்கு வந்தன. தாம் அநியாயமாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இடப்பட்டுள்ளதால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இந்த வாதங்களூடாக மனுதாரர் சார்பு சட்டத்தரணிகள் மன்றிற்கு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் சார்பி லும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல் பிரதிவாதியான பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வாதத்தை முன்வைக்க தயா ரானபோது மனுமீதான விசாரணைகள் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply