ஜெயலலிதா வழக்கில் திங்கட்கிழமை அப்பீல்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா தகவல்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட வழக்கில் முதலில் சென்னை கோர்ட்டிலும், பிறகு பெங்களூர் சிறப்பு கோர்ட்டிலும் 19 ஆண்டுகள் விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா, குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வருக்கும் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை ரூ. 100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதன் பேரில் பெங்களூர் ஐகோர்ட்டில் மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது.

2 மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அந்த விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த குமாரசாமி, சொத்து குவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுமையாக இல்லை என்றும் கணக்கீட்டில் 10 சதவீதம் வரை அதிகம் இருக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பை உதாரணம் காட்டி ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். நீதிபதி குமாரசாமியின் இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக கர்நாடக சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதையடுத்து இந்த அப்பீல் வழக்கில் கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாட பி.வி.ஆச்சார்யா அரசு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த சில தினங்களாக நீதிபதி குன்ஹா, குமாரசாமியின் தீர்ப்புகளை ஒப்பிட்டு தகவல்கள் சேகரித்து மேல் முறையீட்டு மனுவைத் தயாரித்தார்.

தற்போது அந்த மேல் முறையீட்டு மனு டெல்லி கொண்டு செல்லப்பட்டு சட்ட நிபுணர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை (22–ந்தேதி) கர்நாடகா அரசு தரப்பில் அந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா கூறியதாவது:–

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து நாங்கள் தயாரித்துள்ள மேல்முறையீடு மனு ஓரிரு நாட்களில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் வழக்கமான கோர்ட்டு மீண்டும் செயல்பட தொடங்கும் வரை நாங்கள் காத்திருக்கப்போவதில்லை. கோடை விடுமுறை கால கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.

இவ்வாறு கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா கூறினார்.

கோடை கால விடுமுறை கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுவதால் ஜூலை முதல் வாரம் இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply