இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது : சயிட் அல் ஹூசெய்ன்
இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் கலந்துரையாடப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் சிவிலியன் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுஇ பொதுவான ஓர் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில் இலங்கையில், அல்லது சூடான், புருன்டி, மியன்மார் போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பு சிவிலியன் பாதுகாப்பு குறித்து உரிய கரிசனை காட்டியிருந்தால் மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பை கண்டிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இந்த தீர்மானத்திற்கு போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply