குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்
பாகிஸ்தானின் குவெட்டா மருத்துவமனையில் நடைபெற்ற பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் அரசு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் மக்களுக்கும், அரசிற்கும் தனது ஆழ்ந்த வருத்தங்களை பான்-கி-மூன் தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
படுகாயம் அடைந்த அவரை உடனடியாக சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஏராளமான வழக்கறிஞர்கள் உள்பட இது வரை பலியானோர் எண்ணிக்கை 75-ஐ தாண்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply