கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ நிவாரணக் கப்பல்
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென பாகிஸ்தான் அரசின் நிவாரணப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான சுல்பிகார் கப்பல் நேற்று (30) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்நதடைந்நது. கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டாக்டர் சப்ராஸ் அஹ்மத் கான் சிப்ரா சுல்பிகார் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மருத்துவ நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற சுழியோடிகள், மீட்பு பணியாளர்களுடன் மீட்பு படகுகள் மற்றும் ஹெலிகொப்டருடன் உலர் உணவுகள், மருந்து வகைகள் அரிசி, ஜெனரேட்டர்கள் என்பன இக்கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான மேற்படி பி.என்.எஸ் சுல்பிகார் கப்பல் மாலைதீவு கடற்பிரதேசத்தில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கையின் அனர்த்தம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷரீபின் விஷேட உத்தரவின் பேரில் மேற்படி கப்பலை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டாக்டர் சப்ராஸ் அஹ்மத் கான் சிப்ரா தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்பொழுதும் பலமானதாக காணப்படுவதாக தெரிவித்த அவர், இலங்கை விடுக்கும் எந்தவொரு கோரிக்கைகளுக்கும் பாகிஸ்தான் உடனடியாக உதவ தயாராக உள்ளது என்றார்.
இதேவேளை அனர்த்த்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரணங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் நிவாரண பொருட்களுடன் பாகிஸ்தான் கப்பலை அனுப்பியுள்ளமைக்கு இலங்கை அரசின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுல்பிகார் கப்பலின் கட்டளை தளபதி கெப்டன் பைசல் ஜவீட் ஷேக், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ராஜில், இலங்கை கடற்படையின் மேற்கு பிராந்திய கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிரஞ்சன் ஆட்டிகல உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply