அனைத்து அமைச்சுக்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களில் ஜனாதிபதி

அனைத்து அமைச்சுக்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களில் அடுத்த மாதம் முதல் பங்குபற்ற இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஜனாதிபதி செயலக பணிக்குழுவினருடனான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி தொடராய்வு நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பதிநான்கு இலட்சம் அரச ஊழியர்களுக்கு முன்மாதிரியாக வினைத்திறனாக திட்டமிடப்பட்டவாறு ஜனாதிபதி செயலக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்தவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சிபுரியும் அரசியல் தலைமையின் நெறிப்படுத்தல், முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறனிலேயே அரச அலுவல்களுக்கான வழிகாட்டல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் ஒரு போதும் அரச அலுவலர்களை குற்றம்சாட்டுவதில்லை என்பதுடன், ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அரசியல் தலைமையே அதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அரச ஊழியர்கள் அனைவரும் அடுத்துவரும் ஆண்டுகளில் அபிவிருத்தியின் முன்னோடிகளாக மாறி அதனை ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊழல், மோசடி, முறைகேடுகள் எங்கும் இடம்பெறக் கூடாது என்பதுடன், வெளிப்படைத்தன்மையுடனும், தூய்மையாகவும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply