மீனவ சமூகத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைக்கும் இடமில்லை: ஜனாதிபதி

நாட்டிற்கு வலுசேர்க்கும் சக்தியாக காணப்படும் மீன்பிடி சமூகத்தையும் மீனவர்களையும் பலவீனப்படுத்தும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்காக சகல விடயங்களும் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ‘மிரிதிய வருண- 2018’ விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

சீஷெல்ஸ் விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக, அந்நாட்டு எல்லையில் மீன்பிடிக்கச் சென்று கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க சந்தர்ப்பம் கிடைத்ததென்றும் ஜனாதிபதி இதற்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மீனவர்களின் நலனுக்காக சகல உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களுக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை மேலும் பலப்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது தமது பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை மீனவ சமூகத்தினர் ஜனாதிபதியிடம் கையளித்தனர். நீர்நிலைகளில் விடப்படும் மீன்குஞ்சுகளின் அளவை அதிகரித்தல், நீர்வாழ் உயிரினங்களை வளர்க்க அரச காணிகளை பெற்றுக்கொள்ளல், மீன்பிடி துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிறைவேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமென குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, பிரதியமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply