நைஜீரியாவில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் : உயிரிழப்புகளுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்
நைஜீரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல்வேறு ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பினால் சாலைகள், பாலங்கள் என உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 5.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் அழுகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்னர். 1310 பேர் காயமடைந்துள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நைஜீரியாவில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறினார். மேலும் இந்த கடினமான நேரத்தில் நைஜீரியாவுக்கு ஐநா உறுதுணையாக இருப்பதுடன், தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐநா சார்பில் உணவு விநியோகம், அவசரகால மருத்துவ உதவி மற்றும் காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதார பெட்டகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஐநா அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply