அதிமுக குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் : திவாகரன் பேட்டி
அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று மதுரையில் இன்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
அ.தி.மு.க.வின் குழப்பமான நிலைக்கு சசிகலாதான் காரணம். திறமை வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்திருந்தால் இதுபோன்ற பிரச்சினை வந்திருக்காது.
தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது தவறானது. தினகரன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார்.
இடைத்தேர்தலை நேரடியாக சந்திக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தக்கூடாது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணிப்பவர்களுக்கு எங்கள் கட்சி நல்லதொரு கூடாரமாக திகழும்.
நான் அ.தி.மு.க.வில் சேர மாட்டேன். அதில்நான் பங்கு கோரவில்லை. அவர்களே பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். நாம் ஏன் தொந்தரவு தர வேண்டும் என்று தனி இயக்கம் கண்டிருக்கிறோம். எங்களிடம் நல்லவர்கள் 2 பேர் இருந்தால்கூட போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply