கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?- கமல்ஹாசன் விளக்கம்

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானல் கீழ் மலை கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பழங்குடியின மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை. ஒரு சில தன்னார்வலர்கள் மட்டுமே உதவி செய்து உள்ளனர். நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக நான் ஏற்கனவே பயணதிட்டம் தயார் செய்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருந்தேன். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்ததால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply