பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து: ராஜ்நாத் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் சொத்து பட்டியல் தாக்கல் இல்லை
மத்திய மந்திரிகள் அனைவரும் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு எடுத்து அறிவித்தார். இதற்கான கடைசி நாள் ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பிரதமர் மோடி தனது சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி அவருக்கு ரூ.1 கோடியே 13 ஆயிரத்து 403 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-16 நிதி ஆண்டில் அவரது ரொக்க கையிருப்பு ரூ.89 ஆயிரத்து 700 ஆகும். ஆனால் 2016-17 நிதி ஆண்டில் ரொக்க கையிருப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற 15 மந்திரிகள் மட்டும் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்த வகையில் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு 2016-17 நிதி ஆண்டு நிலவரப்படி ரூ.67 கோடியே 62 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடியே 99 லட்சம் ஆகும்.
அவர் 4 வங்கிக்கணக்குகளில் ரூ.64 லட்சம் டெபாசிட்டுகள் வைத்துள்ளார். இதுதவிர ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நகைகளும் அவரிடம் உள்ளன.
வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு ரூ.5 கோடியே 33 லட்சம் மதிப்பிலான சொத்துகளும், மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு ரூ.1 கோடியே 55 லட்சம் சொத்துகளும் உள்ளன.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, ஜவுளி மற்றும் தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்டவர்கள் தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply