மன்னிப்புக் கோரினார் லெதன்டி தோட்ட முகாமையாளர்
ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில், இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகத் தீர்வினைப் பெறும் நோக்கில் நேற்று (26) ஹட்டன் தொழில் திணைக்களத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்த மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், தோட்டத் தொழிலாளர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் பேசியமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தார். அத்துடன், நிர்வாகம் இதற்கு உரிய முறையில் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இதனடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மொழிப் புரிதலில் ஏற்பட்ட தவறின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்த தோட்ட முகாமையாளர், சம்பந்தப்பட்ட தொழிலாளரிடம் நேரடியாக மன்னிப்புக் கோரினார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் பகிரங்கமாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தோட்ட முகாமையாளர், மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், தொழிலாளர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதாகவும் உறுதியளித்தார். இதன்போது, இத்தகைய தவறுகளைத் திருத்திக் கொண்டு தொழிலாளர்களின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறு ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
மேலும், தோட்ட நிர்வாகம் தொடர்பாகத் தொழிலாளர்கள் முன்வைத்த ஏனைய பிரச்சினைகளுக்கும் தோட்ட முகாமையாளரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையால், இக்கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதற்காகத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply