ஆளுங்கட்சியினர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் : எம்.எஸ். உதுமாலெப்பை

முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்வதற்கு தங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறும் ஆளுங்கட்சியினர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நமது நாட்டு மக்களுக்கு ஆளும் கட்சியால் வழங்கிய மிக முக்கியமான விடயங்கள் ஒரு வருடம் சென்ற நிலையிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தினை கொண்டு வந்தீர்கள். எதிர்க்கட்சியினர்களும் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தென்னக்கோனை நீக்குவதற்கு வாக்களித்தோம். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனை பதவியில் இருந்து ஒரே நாளில் நீக்குவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலில் நமது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அவசர ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறைமை எப்படி உருவாக்கப்பட்டது என்ற வரலாறு தொடர்பாக இச்சபையில் சில விடயங்களை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.

நமது நாட்டின் பிரதம மந்திரியாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவி வகித்த காலத்தில் இலங்கையின் இலவச கல்வியின் தந்தை சி.டபிள்யு, டபிள்யு. கண்ணங்கரா நமது நாட்டு மக்களுக்கு பெரும் பணி செய்துவிட்டு பொருளாதார கஷ்டம் தனக்கு ஏற்பட்ட போது 1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரியாக பதவி வகித்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிடம் தனக்கு 500 ரூபாய் பணம் வழங்குமாறு கோரியுள்ளார். இதன் பின் சி.டபிள்யு, டபிள்யு.கண்ணங்கரா பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிடம் 10,000 ரூபாய் பணம் வழங்குமாறு கோரியுள்ளார். அதன்பின் அமைச்சருக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்பு 1977 ஆம் ஆண்டிலிருந்து நமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களாக 05 வருடங்கள் பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் எமது நாட்டில் நீதி நியாயத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து நமது மக்களுக்கு சேவை செய்யும் முறைமை தற்போது இல்லாமல் செய்யப்பட்டு அரசியல் ரீதியாக பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளவர்களும் பெரும் பண பலம் உள்ள அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும், பரம்பரையாக பெரும் பணமுள்ளவர்கள் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய புதிய முறையை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எமது ஜனநாயக ரீதியிலான அரசியல் பாதைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற யதார்த்தத்தினை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக முழுமையாக பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் எனக் கூறினீர்கள். ஒரு வருடம் சென்று நிலையிலும் அந்த வாக்குறுதி இன்றும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களின் அரசியல் இருப்பினை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத சட்டத்தினை பாவித்தனர். அன்று பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக போராடிய இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத சட்டத்தினை நீக்காமல் செயற்பட்டு வருவது குறித்து கவலைப்பட வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply