விஜய்யின் பதவியேற்பு இன்று நடைபெறாது

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்காததால், இன்று நடைபெறு வதாக இருந்த பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கொம்யூனிஸ்ட்டுகள் மற்றும் வி.சி.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைத் த.வெ.க கோரியிருந்தது. இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி த.வெ.க ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்காக மற்ற கட்சிகளுடன் த.வெ.க நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு சென்ற த.வெ.க தலைவர் விஜய், நேற்று பிற்பகல் 1 மணியளவில் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் வெங்கடரமணன் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் நிபந்தனைகளை எப்படிக் கையாள்வது, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிப்பு வழங்குவது மற்றும் பதவியேற்பு விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுவினர் நேரில் வந்து தமது ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

ஆலோசனை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் பனையூர் அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார். சரியாக 3.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை அவர் அடைந்தார். அங்கு ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் பூங்கொத்து கொடுத்து விஜய்யை வரவேற்றார். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்த விஜய்க்கு, ஆளுநர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், 108 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்துடன், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் விஜய் முறைப்படி சமர்ப்பித்தார்.

புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கிய சட்ட நடைமுறையை ஆளுநர் சுட்டிக்காட்டினார். அதாவது, த.வெ.கவுக்கு ஆதரவு அளிக்கும் 118 எம்.எல்.ஏக்கள் அடங்கிய பெயர் பட்டியல் மற்றும் அவர்களின் கையொப்பம் அடங்கிய கடிதத்தை முழுமையாகச் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தப் பட்டியலை ஆய்வு செய்த பிறகே, முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

த.வெ.கவை பொறுத்த வரை பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு, அதன்பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் முழு பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்ததால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று 7 ஆம் திகதி விஜய் முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறாமல் தள்ளிப்போகிறது. எனினும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply