தமிழ் மக்கள் பிரச்சினை தேசிய அரங்கிற்கு வர வேண்டும் : மனோ கணேசன்
தமிழ்ப் பேசும் மக்களது தேசிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்குக் கொண்டு வரப்படவேண்டியது இன்றைய வரலாற்றுக் கடமையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் முடிவுற்ற இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் தேசிய அரசியல் மற்றும் உடனடி நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆனால் இப்பிரச்சினைகளை பின்தள்ளிவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்க்கட்சிகளும் செயற்படுகின்றன.
இந்நோக்கத்திற்கான புதியதோர் அரசியல் களத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தென்னிலங்கையின் முற்போக்கு அமைப்புகளுடன் தீவிரமாகக் கலந்து ஆலோசித்து வருகிறது. அரசாங்கத்தைச் சார்ந்த தமிழ் அமைச்சர்களும் அரசுடன் புதிதாக சங்கமித்துள்ள தமிழ் எம்பிக்களும் அரசாங்கம் வரையறை செய்துள்ள வட்டத்திற்குள்ளேயே செயற்படுகின்றார்கள்.
அரசின் நிகழ்ச்சி நிரலுடன் இவர்களால் ஒருபோதும் முரண்பட முடியாது. அதேவேளை, ஐதேக, ஜேவிபி ஆகிய எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகா கைது, 18ஆவது திருத்தம் ஆகிய விவகாரங்களை விட்டு, வெளியில் வருவதாகத் தெரியவில்லை.
தமிழர் பிரச்சினை
13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை, மீள் குடியேற்றம், வடக்கு,கிழக்கிலும், கொழும்பிலும் காணாமல்போன ஆயிரக்கணக்கானோர் தொடர்பிலான பிரச்சினை, சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் விவகாரம், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வும்,-
அவர்கள் தொடர்பிலான வெளிப்படையற்ற தன்மையும், தொடர்ச்சியாக வறுமை கோட்டிற்கு கீழேயே திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் தோட்டத்தொழிலாளர் விவகாரம், பெருந்தோட்டப் பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் இனவெறி தாக்குதல்கள் ஆகிய பிரச்சினைகள் தேசிய அரங்கிற்கு கொண்டுவரப்படவேண்டும்.
இவற்றை உதாசீனம் செய்துவிட்டு அரசாங்கமும், பிரதான எதிர்கட்சிகளும் பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் நிலைமை மாற்றப்படவேண்டும்.
சரத் பொன்சேகா மற்றும் 18ஆம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஆகிய அமைப்பு ரீதியான போராட்டங்களில் பங்குபற்றும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேசிய அரங்கிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
புதியதோர் அமைப்பு ரீதியான அரசியல் களத்தை ஏற்படுத்துவற்காகத் தென்னிலங்கை இடதுசாரி கட்சிகள், மலையக மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் கருத்து பறிமாற்றங்கள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply