எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதமான வாக்குரிமையை கட்டாயமாக பயன்படுத்துங்கள்: மனோ
கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை உள்ளடங்கிய தலைநகர பிரதேசத்திலே வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதம் வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதமாகும். எனவே இந்த வாக்குரிமை ஆயுதத்தை பயன்படுத்துவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயம் கிடையாது. அது வாக்களிப்பது தொடர்பிலான மேலதிக அறிவுறுத்தலாகவே உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. பல்வேறு காரணங்களுக்காக அது உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேசிய அடையாள அட்டையுன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிப்பதில் எந்த தடையும் கிடையாது.
வாக்குச்சாவடிக்கு செல்வதற்கும், வாக்களிப்பதற்கும், திரும்பி வீடு வருவதற்கும் அரை மணியாளத்திற்கு மேல் ஆகாது. எனவே இந்த அரை மணித்தியாலயத்தை ஒதுக்கி வாக்களிப்பதில் தமிழ் மக்கள் பின் நிற்கக்கூடாது. வழமையாக வாக்களிப்பதில் தமிழ் பெண்கள் கூடுதலாக அக்கறை காட்டுவதில்லை. இன்றைய தேர்தலில் தமிழ் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வாக்களிப்பதில் தலைமையேற்று அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோல் தொடர்மாடி வீடுகளிலும், ஒழுங்கைகளிலும், தோட்டங்களிலும் வாழ்கின்ற இளைஞர்களும், ஆசிரியர்களும், அரச ஊழியர்களும், தனியார்துறை ஊழியர்களும் தாங்களும் வாக்களித்து, ஏனையோரையும் வாக்களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். வர்த்தகத்துறை நண்பர்களும், தொழிலதிபர்களும் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களிப்பதுடன், தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் உரிய விடுமுறைகளை வழங்கி அவர்களை வாக்களிக்கச் சொல்லவேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றமிகு எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்வோம் என அன்புரிமையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply