இலங்கைத் தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்திய நிதியின் செயற்பாடுகள் குறித்து விளக்கம்

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கிய நிதி பற்றி வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு எஸ்.எம். கிருஷ்ணா அளித்துள்ள எழுத்துப் பூர்வமான பதில்:

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காகக் 2009-ம் ஆண்டு இந்தியா சார்பில் ரூ. 500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அதன்படி அந்நாட்டுக்கு 2009-10-ம் நிதியாண்டில் ரூ. 68.96 கோடி, 2010-11-ம் நிதியாண்டில் ரூ. 93.86 கோடி, 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 181.94 கோடி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியில் ரேஷன் பொருள்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் தாற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன.

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய இந்தியாவிலிருந்து 7 குழுக்கள் அனுப்பப்பட்டன.

உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோருக்காக 10,400 மெட்ரிக் தொன்னுக்கும் மேற்பட்ட தங்குமிடப் பொருள்கள், வேளாண் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் 95 ஆயிரம் பொருள்கள், 500 டிராக்டர்களும் வழங்கப்பட்டன.

இவை தவிர வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் பயணிகள் பேருந்து சேவைக்காக 55 பேருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம், வவுனியாவில் செயற்கைக் கை, கால் உறுப்புகளை பொருத்துவதற்காக இந்திய நிபுணர்கள் ஒரு மாத முகாம் நடத்தினர்.

போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சரி செய்ய 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், ரயில்வே, துறைமுகக் கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் மறுவாழ்வு, மீள்குடியேற்றப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக ரூ. 290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கையில் வடக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணிகளுக்காக 80 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கியுள்ளது.

இந்த நிதி அனைத்தும் சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க இரு நாட்டு அரசுகளின் சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்களின் நிலவரம் குறித்து அந்நாட்டு அரசு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்து வருகிறது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கடந்த ஏப்ரல் 16-ம் திகதி முதல் 21-ம் திகதி வரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் என்றார் எஸ்.எம். கிருஷ்ணா.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply