13 ஆவது சட்டத் திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை!

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதற்காக அடுத்த சில தினங்களுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புது தில்லிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இந்தியா,13 ஆவது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இலங்கை அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசு போதிய அக்கறை காட்டவில்லையென தமிழகத்தில் குரல்கள் அதிகமாக எழுந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தில்லி செல்கின்றனர்.

ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களைப் பறிக்கவே திவீ நெகும சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இந்நிலையில் அரசியல் பிரச்சனைக்கு 13 ஆவது சட்டத் திருத்தம் தீர்வாகாது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இலங்கை ஜனாதிபதி அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கிய பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் சேரச் சொல்லி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவிடமிருந்து அழுத்தம் ஏதும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply