ஊடகங்களினூடாக புலிகள் இன்று போராட ஆரம்பித்துள்ளனர் – ஜனாதிபதி
ஊடகங்கள் தனிப்பட்டவரை மட்டுமல்ல, தாய் நாட்டைப் பற்றி உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பாகும். ஒரு காலத்தில் என்னையும் அமைச்சரவையின் நிரூபர் என்றனர். புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல, ஊடகங்களினூடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
2012 வரவு செலவுத் திட்ட உரையின் போது பிரகடனப்படுத்தியதற்கு இணங்க, ஊடகவியலாளர்களுக்கு மடிகணினிகளும் சிரேஷ்ட கலைஞர்களுக்கு வட்டியற்ற வாகனம் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டத்தினை வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, அலரி மாளிகையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கூறுகையில்,
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக எழுத வேண்டும். சுதந்திரமாக கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கான சுதந்திரம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருமுறை, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு இங்கிருக்கின்றவர்களில் சிலர் சென்றிருக்கலாம். இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே கூடுதலான கேள்விகளைக் கேட்டனர். ராஜீவ் காந்தி மரணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பாலசிங்கம் மன்னிப்பு கேட்டமை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.
ஆனால், பிரேமதாஸ, லலித் அதுலத்முதலி, காமினி பொன்சேகா ஆகியோரின் படுகொலைகள், ஹரந்தலாவ, திம்புலான போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், தலதா மாளிகை, ஸ்ரீமா போதி ஆகிய வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலும் படுகொலைகள் குறித்தும் இலங்கை ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பவில்லை.
கேள்விகளை கேட்டிருந்தாலும் அவர்களால் பாதுகாப்பாக திரும்பியிருக்க முடியாது. எனினும், நாட்டில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பாதுகாப்பாக இருக்கின்றனர்.
தராதரமின்றி கேள்விகளைக் கேட்கவும், திரைப்படங்களைத் தயாரிப்பதற்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பார்க்கும் சுதந்திரத்தை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாது.
எனினும், ஊடகவியலாளர்கள் வாழ்க்கையை உயர்த்தினால் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக செயற்படுவார்கள். இல்லையேல், யாருக்கும் அடிபணிந்துவிடுவார்கள்.
நாங்கள் யாருக்கும் கடன்கொடுக்கவில்லை. இது எங்களுடைய கடப்பாடாகும். புலிகள் அமைப்பினர் உலகில் ஊடகங்களை நடத்துவது உங்களுக்கு தெரியும். ஊடக நிறுவனங்களை அப்படியே விலைக்கு பெற்றுவிடுகின்றார்கள்.
ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காகவும் பலியான தங்களுடைய அங்கத்தவர்களின் குடும்பங்களையும் பெற்றோர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வளிப்பதற்காகவும் காசு கொடுத்தவர்கள் இன்று ஊடகங்களை விலைக்கு வாங்குவதற்கு பணம் கொடுக்கின்றனர்.
புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல, ஊடகங்களினூடாக போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர். ஊடகங்கள் தனிப்பட்டவரை மட்டுமல்ல, தாய் நாட்டைப் பற்றி உலக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது ஊடகங்களின் பொறுப்பாகும். ஒரு காலத்தில் என்னையும் அமைச்சரவையின் நிரூபர் என்றனர்’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply