குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை
கைக்குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபை இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடமிருந்து குழந்தைகளை பெற்று சிறுவர் பராமரிப்பு இல்லங்களிடம் ஒப்படைக்கப்படும். சிலர் குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் குழந்தைக்கு மயக்க மருந்தை ஊட்டி பரிதாபமாக காண்பித்து பிச்சை எடுக்கின்றனர்.
இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பொலிஸ் மாஅதிபர் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் இவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். குழந்தைகளை சுமந்தவாறோ, சிறுவர் சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களைக் கண்டால் 1929 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் கைக்குழந்தையை சுமந்தவாறோ சிறுவர், சிறுமியரை அழைத்துக்கொண்டோ பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply