ஹலால் சான்றிதழ்: அரசாங்கம் பொறுப்பேற்க உலமா சபை வேண்டுகோள்

ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் பெறுப்பேற்று அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது. இதற்காக தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாமெனவும் உலமா சபை தெரிவித்தது.

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பிற்பகல் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது உலமா சபை மேற்படி வேண்டுகோளை விடுத்தது.

இனங்களுக்கிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் விதத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது அமைப்பு, இந்த மாற்று யோசனையை முன்வைப்பதாக உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

முஸ்லிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சாதகமான தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுத் தருமென நம்புவ தாகவும், தங்களது மாற்று யோசனை குறித்து ஜனாதிபதி நியமித்துள்ள அமை ச்சரவை உபகுழுவுடன் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலமாசபைத் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷேக் எம்.எம்.ஏ.முபாரக், ஹலால் பிரிவின் தலைவர் அஷ்ஷேக் முர்ஷித் ஆகியோர் கலந்துகொண்ட இந்தச் செய்தியாளர் மாநாட்டில் மேலும் குறிப்பிட்டதாவது,

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை முஸ்லிம் சமூகத்தவருக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளுமாறு சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம்கள் ஹலால் ஆனவற்றை மாத்திரம் உண்ண வேண்டும் என்ற கட்டாய மார்க்கக் கட்டளையை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு துணைபுரியும் நோக்குடனேயே ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது என்றும் அதில், இலாபம் பெறுவது உட்பட வேறு எந்த உள்நோக்கமும் கிடையவே கிடையாது என்றும் இடைவிடாது நாம் கூறிவரும் நிலைப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றனர்.

இதை நிரூபிக்கும் ஒரு நடவடிக்கையாக 2012 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் கடைசி நிதியாண்டின் வரவுசெலவு விபரத்தின் முக்கிய விடயங்களை பொதுமக்கள் பரிசீலனைக்கு முன்வைக்க நாம் முடிவுசெய்தோம். அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நமது அமைப்புடன் பதிவு பெற்றிருந்த 150 ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் நாம் பெற்ற மொத்த வருமானம் 17,902,807.50 ஆகும். ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாடுகளுக்குக்குரிய செலவீனங்களுக்குப் பின் ரூபா 2,669,420.80 இலாபமாகப் பெறப்பட்டதுடன் இத்தொகை நமது ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டு வருகின்றது.

மேற்படி விபரங்களின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் தீய நோக்கங்களுக்காக செலவிடப் படுவதாக சிலரால் கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று திட்டவட்டமாக மறுக்கின்றோம். மாறாக நம்மிடம் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கு ஒப்பீட்டு அடிப்படையில் மிகச் சிறியதொரு கட்டணத்தையே செலுத்தவேண்டும். அதன் காரணமாகவும், அதன் ஒளிவுமறைவற்ற முறைமை காரணமாகவும், நிறுவனங்கள் பெறக்கூடிய பொருளாதார நன்மை மிகவும் பாரியதாகும். மேலும் இச்சான்றிதழ் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த மிக அவசியம் என்ற அடிப்படை உண்மைகளை உற்பத்தி நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதன் காரணமாக அவை தாமாக முன் வந்து ஹலால் சான்றிதழை பெறுகின்றன என்பதே உண்மை நிலையாகும்.

மேற்படி விடயங்களை நாம் மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தியும், நமது கணக்கு விபரங்களை உரிய அதிகாரிகள் வந்து பரிசீலனை செய்து உண்மையை அறியலாம் என்றும் நாம் அழைப்பு விடுத்தும் தவறான கருத்துக்களையும் அடிப்படையற்ற சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஹலால் சான்றிதழ் விடயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குறிப்பாக நட்புறவுடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்ற நிலை எம்மை கவலைகொள்ளச் செய்துள்ளது என்றனர்.

இந்த அடிப்படையில் இனங்களுக்கி டையே பிரிவினையை தோற்றுவிக்கும் விதத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்ந்தும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்று யோசனையை முன்வைக்க விரும்புகின்றது.

அதன்படி, ஹலால் சான்றிதழ் செயற் பாட்டை அரசாங்கமே பொறுப்பேற்று ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் என உலமா சபை ஆலோசனை தெரிவிக் கிறது. இதற்காக தற்சமயம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் ஹலால் சான்றிதழ் செயற்பாடுகளை இல ங்கை அரசு முன்மாதிரியாகக் கொண்டு செயற்படலாம். நடைமுறையிலுள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையானது ஒரு வர்த்தக, இலாபமீட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தவில்லை என்பதையும் சமூகத்தின் நியாயமான ஒரு தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒரு சேவையாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply