தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய தூண்டடுமாறு கோரிக்கை

வட மாகாண தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும்படி அதன் தலைமைத்துவத்திற்கு தூண்டுதல் வழங்குமாறு மன்னர் ஆயர் இராயப்பு ஜோஸப்பிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கேட்டுள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், தமிழ் விடுதலை கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் தவிர ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் ஆயரை சந்தித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய தமிழரசுக் கட்சியை தூண்டும்படி அவரிடம் கேட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆதிக்கம் செலுத்துவதாக இந்த நான்கு கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பரின் பின்னர் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

சர்வதேசத்தின் கவனம் வட மாகாண சபை தேர்தல் மேல் உள்ளது. மேலும் முதலமைச்சர் பதவி மீது பலர் கண்வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply