பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வதற்கான காரணம்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக்காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பம் தனக்கு கிட்டுமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப் பாருங்கள் எனும் நிகழ்ச்சித்தொடரின்போது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் கலந்துகொள்ளப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் எதற்காக தீர்மானித்திருந்ததென்ற கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயப்பரப்புக்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கை அரசை மேலும் வலியுறுத்திடவும் மேற்படி மாநாடு அரிய வாய்ப்பொன்றாக அமையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நகரான பேர்த்தில் நடைபெற்றிருந்த முந்தைய கூட்டத்தில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் புதியதொன்றல்ல எனவும் அவர் கூறினார்.
பொதுநலவாய அமைப்பில் பிரித்தானியா கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாகவே மேற்படி மாநாட்டில் தான் கலந்துகொள்ளபோவதென்பதை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரன் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து உயர்ஸ்தானிகர் ரான்கின் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய அமைப்பானது ஜனநாயகம், அபிவிருத்தி, மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றுக்கான பகிர்ந்துகொள்ளப்பட்ட கண்ணியம் கலந்த விழுமியங்களைக் கொண்டுள்ளதொன்றாகுமெனவும், இத்தகைய விழுமியங்களை இலங்கை பேணி நடக்குமென்ற தனது எதிர்பார்ப்பை பிரித்தானிய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply