காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான்குர்ஷித் கொழும்பு சென்றார்

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சல்மான்குர்ஷித் கொழும்பு சென்றார்.இலங்கையின் கொழும்பு நகரில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு வருகிற 15–ந்தேதி தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டுக்கு தலைமை தாங்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் தலைவராக இருப்பார்.ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபக்சே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒட்டுமொத்த குரல் எழுந்தது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமரோ அல்லது பிரதிநிதிகளோ யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினார்.

இதையடுத்து காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளமாட்டார் என்றும், ஆனால் வெளியுறவு மந்திரி சல்மான்குர்ஷித் இந்தியா சார்பில் பங்கேற்பார் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தை நேற்று கூட்டினார். அதில் இந்தியா சார்பில் எந்த பிரதிநிதியும் மாநாட்டில் பங்கேற்க கூடாது. முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சட்டசபையில் நேற்று 2–வது முறையாக நிறைவேற்றிய தீர்மானத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மத்திய வெளியுறவு மந்திரி சல்மான்குர்ஷித் இன்று காலை கொழும்பு புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் கொழும்பு போய்ச் சேர்ந்தார். அவருடன் மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் சென்றனர். கொழும்பு விமான நிலையத்தில் இந்திய குழுவினரை இலங்கை அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர்.

முன்னதாக டெல்லியில் சல்மான் குர்ஷித்தை இளங்கோ தலைமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் சந்தித்து பேசினார்கள்.

அப்போது இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் தமிழகம் புதுவையைச் சேர்ந்த 81 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதுபற்றி கவனத்தில் கொள்வதாக அவர்களிடம் சல்மான் குர்ஷித் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் அலுவலக மந்திரி நாராயணசாமியும் உடன் இருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply