பொதுநலவாய மாநாட்டிற்காக அரசாங்கம் எல்லைமீறி பணத்தை வீண்விரயம் செய்கிறது :ஐ.தே.க.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச அளவில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இத்தறுவாயில் பொதுநலவாய மாநாட்டுக்காக அரசு தனது எல்லை மீறி பணத்தை வீண் விரயம் செய்கிறது. இருப்பினும் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது.அத்துடன் பொதுநலவாய அமைப்பின் தலைமை பதவியை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஏற்ற பின்னர் பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளை பாதுகாக்குமாறு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு அதனூடாக இலங்கை வாழ் மக்கள் உரிமைகளுக்காக பயமின்றி போராட முடியும் என அக்கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச அளவில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளாக கருதப்படும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவை மீறப்படுவதாக பல்வேறு நாடுகள் இலங்கையின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. எவ்வாறாயினும் இம்முறை பொதுநலவாய அரச மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. 1983 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அப்போதைய பொதுநலவாய அமைப்பின் செயலாளர் சிறிதன் ரம்பால் முடிவெடுத்த போதும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அதனை முற்றாக நிராகரித்தார். அதற்கு மூலகாரணம் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு போதியளவிலான நிதிக் கொள்கை காணப்படாமையாகும்.
இருப்பினும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் நிராகரிக்கப்பட்ட பொதுநலவாய மாநாட்டை தற்போதைய ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார். இம்மாநாட்டுக்காக கொழும்பு நகரை அலங்காரமயப்படுத்துவதற்கு அரசு தனது எல்லையை மீறி வீண் விரயம் செய்கிறது. இவ்வலங்கார செயற்றிட்டங்களுக்கு பெருமளவிலான தொகை செலவிடப்பட்ட போதும் அதனை அரசாங்கம் மறைத்துள்ளது. எனவே இம்மாநாட்டுக்காக அரசினால் செலவிடப்படும் செலவீனங்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். அத்துடன் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடைபெறாமை, பாராளுமன்றத்தை அவமதித்தல் பேச்சுரிமை சுதந்திரம் மீதான அச்சுறுத்தல், ஊடகவியலாளர் கடத்தல் மற்றும் படுகொலை செய்தல், நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை சட்டத்துக்கு முரணான வகையில் நீக்கியமை மற்றும் நீதிமன்ற, தேர்தல் மற்றும் பொலிஸ் சுயாதீன ஆணைக்குழு நியமிக்காமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை பொது நலவாய அமைப்பிலுள்ள நாடுகள் முன்வைக்கின்றன.
அது மாத்திரமன்றி சர்வதேச சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் இருவரின் பயண அனுமதிப்பத்திரத்தை நிராகரித்தமை போன்றவை பொதுநலவாய அமைப்பின் மனித உரிமை மீறல்களாக கருதப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பொறுப்பேற்கவுள்ள நிலையில் பொதுநலவாய அமைப்பின் கோட்பாடுகளாக கருதப்படும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், மனித உரிமை, பேச்சுரிமைச் சுதந்திரம், அதிகாரப்பகிர்வு, சட்டவாட்சி , நல்லாட்சி, சுகாதார, கல்வி, உணவு மற்றும் வீட்டுரிமை, ஆண் பெண்களுக்கான சமவுரிமை மற்றும் சிவில் சமூகத்தவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என மேற்படி கோட்பாடுகளை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ செயற்படுத்துவாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பொதுநலவாய அமைப்பின் மேற்படி கோட்பாடுகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்டிருந்தால் தமக்குள்ள உரிமை தொடர்பாக நமது நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருப்பர். இருப்பினும் அதனை நமது அரசாங்கம் செயற்படுத்தவில்லை. அதேபோன்று பொதுநலவாய அமைப்பின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஏற்றவுடன் பொதுநலவாய அமைப்பின் கோட்பாட்டை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுக்கு வாய்ப்பு கிட்டும். எனவே, மக்களுக்குள்ள உரிமைகளை பெற்றுக்கொடுக்க அரசுடன் போராட முடியும். எவ்வாறாயினும் இலங்கை மீதுள்ள மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்வார் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply