பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநா ட்டின் ஆரம்ப வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இன்று ஆரம்பமாகும் அரச தலைவர்கள் மாநாடு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணிவரை நடைபெறும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா மற்றும் பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் அவுஸதிரேலிய பிரதமர் டோனி அப்போர்ட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப வைபவம் நடைபெறும் தாமரை தடாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் அரச தலைவர்களை வரவேற்பதற்கான ஒத்திகைகளும் கடந்த சில தினங்களாக இடம்பெற்றன.
மேலும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் பொலிஸார் பொதுநலவாய பாதுகாப்பு பணிக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் இல ங்கை வந்தடைந்துவிட்டனர். பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமீலாவும் நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தனர்.
இன்றைய அரச தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திலும் வேட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலிலும் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் கலந்துரையாடல்கள் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்புக்களும் அவ்வப்போது மூன்று தினங்களிலும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அந்ததந்த நாடுகளின் தூதரகங்கள் முன்னெடுத்துள்ளன.
பொதுநலவாய அரச தலைவர்களின் பாரியார்கள் கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகள் கொழும்பிலும் கண்டியிலும் இன்றும நாளையும் நடைபெறவுள்ளன.
இது இவ்வாறு இருக்க இந்தியா கனடா மற்றும் மொரிஷியஷ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்கின்றார். இந்தியாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டுள்ளமை திருப்தியளிக்கின்றது என்று நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சில தினங்களாக அம்பாந்தோட்டையில் நடைபெற்றுவந்த பொதுநலவாய இளைஞர் மாநாடு மற்றும் பொதுநலவாய மக்கள் மாநாடு ஆகியனவும் கொழும்பில் நடைபெற்றுவந்த பொதுநலவாய வர்த்தக மாநாடும் நிறைவடைந்துவிட்டன. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் காரணமாக அவ்வப்போது கொழும்பு நகரின் சில வீதிகள் மூடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply