ஜெனிவா தீர்மானத்தை வலுவாக மாற்றி மக்களை ஒன்றுதிரட்டவும் தயாராகவேண்டும் : சம்பந்தன்
ஜெனிவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கடுமையான சவால்களும் அழுத்தங்களும் ஏற்படும் என்பதனாலேயே ஜனாதிபதியும் அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று தமக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஜெனிவா மாநாடு நடைபெறுவதற்கு முன் நாமும் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து எமது பிரச்சினைகளை விளங்கப்படுத்த வேண்டிய அவசியத் தேவை இப்போது உருவாகியுள்ளது. இதன் மூலமே ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு தீர்க்கமான அழுத்தத்தினை ஏற்படுத்த முடியுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொட்டு 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் இறுதி வாரத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுமெனவும் அத்தீர்மானம் இலங்கைக்கு கடுமையான சவாலையும் அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
இவ் தீர்மானத்தினை முறியடிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களும் பலநாடுகளுக்கு விஜயம் செய்து தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் நாடுகளை தேடித்தேடி அவர்கள் செல்வது இதுவே காரணமாகும்.
ஆயினும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அழுத்தமான தீர்மானமாக மாற்ற வேண்டியது அவசியமாகும். எமக்கு சாதகமாக இதனைப் பயன்படுத்துவதற்கு எமது தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளுடன் ஒற்றுமையுடன் செயற்படுவோமாயின் அது பலமான செயற்பாடாக அமையும். நாம் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் உள்ளோம்.
உள்ளூராட்சி சபைகளாக இருக்கட்டும், மாகாண சபைகளாக இருக்கட்டும் பாராளுமன்றமாக இருக்கட்டும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்திலேயே நாம் உள்ளோம். எனவே, முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையுடன் தீர்க்கமான முறையில் செயற்பட வேண்டும்.அண்மையில் உள்ளூராட்சி சபைகள் சிலவற்றில் வரவு- செலவு திட்டம் நிறைவேற்றுதல் தொடர்பில் சில தளம்பல் நிலைகள் ஏற்பட்டமையானது அதிருப்தி அளிப்பதாகவே உள்ளது.
நாம் நமது இலட்சிய வெற்றியை பெற்றுக் கொள்வதற்கு போராட வேண்டியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எம் இலட்சியங்களை மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் முனையவில்லை. ஆனால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகள் கொடுத்த அழுத்தமே வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டதற்கு காரணம். இருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தை கைப்பற்றியதன் காரணமாக வடமாகாண சபையை இயங்கவிடாது முட்டுக்கட்டை போடுவதிலேயே அரசாங்கம் அக்கறை காட்டி வருவதைக் காண்கிறோம்.
வடமாகாண சபை சரியாக இயங்கி அதிகாரம் கிடைக்கப் பெற்றால் ஏனைய மாகாண சபைகளுக்கு அது முன்மாதிரியாக அமையும் என்ற காரணத்தினாலேயே மிக சூட்சுமமாக வடமாகாண சபையை முடக்கும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்குள் வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்த போதிலும் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றே கூற வேண்டும்.
குறிப்பாக வடமாகாண பிரதம செயலாளரை இடமாற்றம் செய்வது தவிர்ந்த ஏனைய எல்லா விடயங்களையும் செய்வேன் என்று கூறிய ஜனாதிபதி இதுவரை அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் செயற்படுத்தவில்லை.
பிரதேச செயலாளரை மாற்ற முடியாமைக்கான காரணத்தை கூறுகின்ற போது அதற்கு பொருத்தமான இன்னொருவரை தேர்ந்தெடுப்பதற்கு நிலை இல்லை. எனவே மாற்ற முடியாது என காரணம் கூறினர்.
எவ்வாறாயினும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்பாக நாங்கள் பல்வேறு முன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு அமைய மாநாட்டிற்கு முன்னர் நாங்கள் பல நாடுகளுக்கு விஜயம் செய்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
ஜெனீவாவிற்கு முன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஜனநாயக நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படின் அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தயாராக இருக்கின்ற போது தான் எங்களது இலக்கை அடைய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply