அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசை கவிழ்ப்பதற்கு சதி செய்வதாக கூறும் அரசு ஏன் அவர்களை கைதுசெய்யவில்லை: அசாத்சாலி
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் (என். ஜீ.ஓ) சதி செய்வதாக அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது. அப்படியானால் அவ்வாறானவர்களை அரசாங்கம் கைது செய்யவில்லை என கேள்வியெழுப்பும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, ஹுலுகல்லவின் இன்றைய நிலைமையை அமைச்சர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.அதிகாரத்தைப் பரவலாக்கி நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றபோதே அதன் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியை மின்சாரக்கதிரையில் அமரச் செய்யப் போகின்றது, சர்வதேசத்தால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படப் போகின்றது என அரசாங்கம் மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு கூறி மக்களை ஏமாற்றி எதிர்வரும் தேர்தல்களில் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கவே அரசு முயற்சிக்கின்றது. இந்துக் கோயில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடைப்பதற்காக பொது பல சேனாவை பயன்படுத்தும் அரசாங்கம் மறுபுறம் பிரதமருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவதற்கு ஜாதிக ஹெல உறுமயவை தூண்டிவிடுகிறது. இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு தமது கடமைகளை சுதந்திரமாக செய்ய முடியாது. அவர்களை தனியொரு குடும்பத்தினரே ஆட்டுவிக்கின்றனர்.
எனவே, அமைச்சர்கள் பொம்மைகளாகவே உள்ளனர். இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன டில்லிக்குச் சென்று மத்திய அரசின் ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளதோடு இப்பிரச்சினையில் முரண்டு பிடித்த தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து தமிழ் நாட்டு அதிகாரிகளுடன் எமது அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தி ஒரு மாத காலம் இரு நாட்டு கடல் எல்லையில் மீன்பிடிப்பதில்லையென்றும் அதற்குள் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஆனால், இதனை குழப்பி தேசப்பற்றாளர்கள் என பெயரை தேடிக்கொள்ள ஹெல உறுமய முயற்சிக்கின்றது. அரசாங்கம் அரசியல் ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதனால்தான் நடிகைகளை தேர்தலில் போட்டியிடச் செய்யவுள்ளனர்.அரசாங்கத்தை கவிழ்க்க (என். ஜீ.ஓ) க்கள் சதிசெய்வதாக அரசாங்கம் கூறுகிறது.
அப்படியானால் ஏன் அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை. ஏனென்றால் அவ்வாறான சதித்திட்டங்களே கிடையாது அதனை நிரூபிக்கவும் முடியாது. மக்களை ஏமாற்றி அனுதாபத்தை பெறவே இந்த முயற்சியாகும். ஹூலுகல்ல பதவியிலிருந்தபோது என்ன ஆட்டம் போட்டார். ஆனால் இன்று ஆடி அடங்கவிட்டார். ஆட்டுவித்தவர்களே அவரை அடக்கிவிட்டனர். இதனை அமைச்சர் சிலர் பாடமாகக்கொள்ள வேண்டுமென்றும் அசாத்சாலி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply