ஐ. நா. பக்கச்சார்பாகவே செயற்பட்டு வருகின்றது : கெஹெலிய ரம்புக்வெல
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாகவே செயற்பட்டுவந்துள்ளது. அது தொடர்ந்து பக்கச்சார்பாகவே செயற்படும். அந்த சவால் எங்களுக்கு உள்ளது. அதனை உணர்ந்தே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டக்கட்டமைப்பு எமது நாட்டுக்கு பொருத்தமற்றது என்பதற்காகவே நாங்கள் புலித்தடைக்கு எதிரான வழக்கில் ஆஜராகவில்லை. ஆனால் தகவல்களை வழங்கிவந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டக்கட்டமைப்பு எமது நாட்டுக்கு பொருத்தமற்றது என்பதற்காகவே நாங்கள் புலித்தடைக்கு எதிரான வழக்கில் ஆஜராகவில்லை. அதாவது சர்வதேசம் விடுக்கின்ற உத்தரவுகளை இறைமையுள்ள நாடு என்றவகையில் இலங்கை ஏற்காது. எனவே இவ்வானாற சந்தர்ப்பங்களில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திங்களில் உள்ளடங்க முடியாது.
ஆனால் தகவல்களை வழங்கிவந்தோம். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தகவல் வழங்கினோம். தொடர்ந்து தேவையான தகவல்களை வழங்குவோம். மேன்முறையீட்டுக்கும் உதவுவோம்.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாகவே செயற்பட்டுவந்துள்ளது. அது தொடர்ந்து பக்கச்சார்பாகவே செயற்படும். அந்த சவால் எங்களுக்கு உள்ளது. அதனை உணர்ந்தே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம். திருகோணமலையில் ஐந்து மாணவர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை அலுவலகம் பேசுகின்றது. ஆனால் இதுவே அன்று 700 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர்கள் பேசுவதில்லை.
எனவே அவர்கள் எப்போதும் பக்கச்சார்பாகவே செயற்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஜெனிவா மனித உரிமை அலுவலகம் இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அந்த சவாலை எதிர்கொள்ளவும் அதற்கேற்ற வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கிக்கொண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கின்றனர். இதுவே ஒசாமா பின்லாடனின் உருவப்படத்தைக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்புகின்றோம். எனவே சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply