மஹிந்தவின் இடத்தில் ரணிலும் சம்பந்தனும் இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது: தினேஷ் குணவர்த்தன
ஆட்சி மாற்றம் என்ற பெயரில் சர்வதேச சதித்திட்டத்தினை அரங்கேற்றச்செய்யவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலையான அரசாங்கம் இல்லாத நாடாக இலங்கை மாறிவிட்டதென குற்றம் சுமத்தும் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மஹிந்த ராஜபக்ஷவின் இடத்தில் சம்பந்தனும் ரணில் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகின்றீர்கள் என வினவிய போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதானது,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட வேண்டுமென்பதே எமது நோக்கம். அதற்கான முயற்சிகளையே இப்போது பங்காளிக்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் எமது ஆட்சியினை தக்க வைக்க வேண்டும்.
எமது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதும் முன்னாள் ஜனாதிபதி அதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருப்பதும் கட்சியினை பலப்படுத்தி பாதுகாக்கும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் பாராளுமன்ற அதிகாரமும் எம்மிடம் வரவேண்டும். அதற்கு மிகச் சரியான நபர் எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே. எனவே அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நல்லாட்சியினை உருவாக்க வேண்டும்.
மேலும் நாட்டினை ஒன்றுபடுத்தி தீவிரவாதத்தினையும் பிரிவினைவாதத்தினையும் முற்றாக அழித்த எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் இன்று சிதறடிக்கப்பட்டு பிரிவினை வாதத்திற்கு ஏற்ற அரசாங்கம் அடித்தளம் போட்டு வருகின்றது. அவசியமற்ற தவறான எண்ணத்தினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு சர்வதேசத்தின் சதித்திட்ட எண்ணங்களை பூர்த்தி செய்யக்கூடிய தடைகளற்ற தேசிய அரசாங்கத்தினை இவர்கள் உருவாக்கி விட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடமும் கையளிக்கப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து பிரிவினைவாதத்திற்கு ஏற்றதும் புலிகளுக்கு ஏற்றதுமான ஈழக்கொள்கையினை உறுதியாக நிலை நாட்டி வருகின்றனர். இதற்கு இனி ஒருபோதும் இடமளிக்க முடியாது. எனவே பிரிவினையினை தோற்கடிக்க வேண்டுமாயின் சிங்கள தேசமொன்றினை உருவாக்க மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு காலெடுத்து வைக்க வேண்டும்.
இன்று அரசாங்கம் இல்லாத நாடாக எமது நாடு மாற்றமடைந்து விட்டது. உறுதியான அரசாங்கம் இருந்த போது எதிர்க்கட்சி பலவீனமடைந்திருந்தது. ஆனபோதிலும் நாடு பாதுகாப்பாகவே இருந்தது. ஆனால் இப்போது அரசாங்கம் இன்று சிதறடிக்கப்பட்டு விட்டது. எதிர்க்கட்சி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. கட்சிகள் இல்லாத அரசியல் தான் இன்று இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் பழைய நிலைமைகளை கொண்டு வர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரிவினை வாத அரசியலை கட்டுப்படுத்தி மீண்டும் நாட்டில் நல்லாட்சியினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply