1465 கி.மீ பயணம் செய்து இந்தியா வந்த உலகைச் சுற்றும் சூரிய ஒளி விமானம்
அபுதாபியிலிருந்து நேற்று முன்தினம் தனது பயணத்தைத் தொடங்கிய உலகைச் சுற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விமானமான ’சோலார் இம்பல்ஸ் 2’ நேற்று நள்ளிரவு குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றவுள்ள இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க இருக்கிறது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்க உள்ளது.
அந்த வகையில் அபுதாபியிலிருந்து புறப்பட்டு ஓமன் வந்தடைந்த விமானம், ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு அரபிக்கடல் வழியாக 1465 கி.மீ பயணம் செய்து நேற்று இரவு 11.25 மணிக்கு, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானத்தை இயக்கிய பெர்ட்ரண்ட் பிக்கார்டுக்கு மோனாகோவில் உள்ள விமானத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்விட்டர் மூலம் வாழ்த்து சொல்லப்பட்டது. அவரையும் அவரது சகவிமானிகளையும் விமான நிலைய அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
’சோலார் இம்பல்ஸ் 2’-வின் வருகையையொட்டி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் நான்கு நாட்கள் இந்த விமானம் அகமதாபாத்தில் வைக்கப்படும் என்று சுவிஸ் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பின்னர் அங்கிருந்து கிளம்பி வாரணாசியில் சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு மார்ச் 16-ம் தேதி மியான்மருக்குச் செல்லும் தனது பயணத்தின் நான்காவது பகுதியைத் தொடங்க இருக்கிறது.
இந்த விமானத்தில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணம் செய்கின்றனர். இந்த சுற்றுப்பயணத்தின் மிக நீண்ட பகுதியாக விமானிகளில் ஒருவர், சீனாவில் இருந்து ஹவாய்க்கு, சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்தை ஐந்து நாட்கள் இரவும் பகலும் இடைவிடாமல் பறந்து கடக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply