தமிழக மீனவர்களின் 87 படகுகளில் 50 படகுகள் சேதமாகி விட்டன: மோடி சுற்றுப்பயணம் முடிந்த பிறகு மீட்க நடவடிக்கை

தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 87 படகுகளை விடுவிக்க வேண்டும்’ என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.கடந்த மாதம் இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வந்தார். அப்போது ‘நல்லெண்ண நடவடிக்கையாக, 87 படகுகளும் விடுவிக்கப்படும்’ என்று அறிவித்தார். இதையடுத்து இலங்கையில் இருந்து படகுகளை கொண்டு வருவதற்காக தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் திரிகோணமலை, தலைமன்னார், காரைநகர், காங்கேசன் துறை ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன. நீண்ட நாட்களாக இந்த படகுகள் பராமரிப்பு இன்றி இருந்தன.இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 87 படகுகளில் 4 காரைக்கால் மீனவர்களுக்கு சொந்தமானவை. 39 படகுகள் ராமேஸ்வரம் மீனவர்களுடையது. 26 புதுக்கோட்டை மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டவை. 10 நாகப்பட்டினம் மீனவர்களுக்கு சொந்தமானவை. 5 படகுகள் மண்டபம் மீனவர்களுக்குரியவை.இவற்றில் 15 படகுகள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளன. 35 படகுகள் ஓரளவு சேதம் அடைந்துள்ளன.

இந்த 50 படகுகளை சீரமைத்த பிறகே கொண்டுவர முடியும். 30 படகுகள் தான் உடனடியாக கொண்டு வரும் நிலையில் இருக்கின்றன. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக விடுவிக்கப்பட்டிருந்தால் படகுகள் சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என்று மீனவர் சங்க தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.இலங்கை அதிபர் சிறிசேனா, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தவுடன், தமிழக அதிகாரிகள் இலங்கை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை முறைப்படி தாக்கல் செய்தனர்.

ஆனால் படகுகளை உடனடியாக திரும்பப் பெற முடியவில்லை.மீட்கப்படாத தமிழக மீனவர்களின் படகுகளை பிப்ரவரி 12–ந் தேதியில் இருந்து 26–ந் தேதிக்குள் திரும்பப் பெற இந்திய கடலோர காவல்படை தயாராக இருக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிசேனாவின் இந்திய வருகை, மற்றும் கச்சத்தீவு திருவிழா காரணமாக இலங்கை கடற்படையினர் இதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே படகுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.வருகிற 15–ந் தேதி முதல் பிரதமர் மோடி இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். எனவே உடனடியாக படகுகளை திருப்பி அனுப்ப இயலாத நிலை உள்ளது.பிரதமர் மோடி இலங்கை வந்து சென்ற பிறகு படகுகளை திரும்ப ஒப்படைக்கும் பணி வேகமாக நடைபெறும். அதன் பிறகே படகுகள் தமிழகம் வரும் என்று இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply