சுட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான வால்டர் ஸ்காட்க்கு நூற்றுக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி
வெள்ளையின காவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான வால்டர் ஸ்காட்க்கு மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தெற்கு கரோலினாவில் உள்ள வடக்கு சார்லஸ்டன் பகுதியில் நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான 50 வயது வால்டர் ஸ்காட்டை, ரோந்து போலீஸ் அதிகாரியான 33 வயது மைக்கேல் ஸ்லேகர் தடுத்து நிறுத்தினார். அவரிடம் இருந்து தப்பித்து ஓடிய அவரை குருவி சுடுவது போல் முதுகில் ஐந்து முறை சரமாரியாக சுட்டுத்தள்ளினார். இதில் சம்பவ இடத்திலேயே வால்டர் ஸ்காட் பலியானார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒருவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வால்டர் ஸ்காட்டின் இறுதி சடங்குகள் நேற்று அங்குள்ள தேவலாயத்தில் நடந்தது. இதில் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். அப்பகுதியில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் மிகுந்த துயரத்துடன் கலந்து கொண்டார்கள். இதனால் தேவலாயத்தில் இடப்பற்றாகுறை ஏற்பட்டது.
வால்டர் ஸ்காட்டின் உடல் அமெரிக்கா கொடியால் மூடப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மிகவும் பிடித்த கால் பந்து அணியின் சின்னம் உள்ள கொடியும் உடல் அருகே வைக்கப்பட்டிருந்தது அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
வால்டர் ஸ்காட்டை சுட்டு கொன்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply