சர்வதேச விசாரணைக்கும் அரசு அனுமதி வழங்கும்
எமது ஆட்சிக்காலத்தில் பலப்படுத்திய தேசிய பாதுகாப்பை இந்த அரசாங்கம் கேள்விக்குறியாக்கிவிட்டது. சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் புலிகளுடன் அரசாங்கம் தொடர்புபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கும் இந்த அரசாங்கம் அனுமதி வழங்கும், ஆட்சி மாற்றதின் நோக்கமும் அதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. இவர்களின் செயற்பாடுகள் இன்று சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்றன. மேற்கு உலக நாடுகளின் விடுதலைப் புலிகளின் அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் ஒன்றிணைத்து செயற்படுகின்றன.
இது எமக்கும் நன்றாகவே தெரியும். இவர்களால் எமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் உள்ளது. இன்று புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளே அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்க ஆரம்பித்து விட்டன. அமெரிக்கா, கனடா. பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் புலிகளின் பலமானதொரு வலையமைப்பு இயங்கி வருகின்றது. ஆனால் அந்த நாடுகளுக்கே இது அச்சுறுத்தலான விடயமாக மாறிவிட்டது.
அதேபோல் கடந்த காலத்தில் எமது ஆட்சியில் புலிகளை தலைதூக்க அனுமதிக்கவில்லை. யுத்தத்துக்கு பின்னரும் வடக்கில் புலிகளை நினைவுகூரும் வகையில் ஒரு சில செயற்பாடுகள் நடக்கவிருந்த போதிலும் எமது அரசாங்கம் அவற்றை தடுத்து நிறுத்தியது. புலம்பெயர் அமைப்புகள் இலங்கையை ஆக்கிரமிக்க நினைத்த போதிலும் நாம் கவனமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
ஆனால் இந்த அரசாங்கம் வடக்கில் விடுதலைப்புலிகளின் அனுஷ்டிப்பு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வடக்கில் மாவீரர் தினம், முள்ளிவாய்க்காலில் புலிகளை நினைவுகூர அனுமதித்துள்ளனர். இவை அனைத்தும் சர்வதேச புலிகள் அமைப்பின் தூண்டுதலில் தான் இடம்பெறுகின்றது.
மேலும் சர்வதேச புலிகள் அமைப்புகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து லண்டனில் மாநாடு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட ஒரு சிலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆகவே இந்த அரசாங்கம் சர்வதேச அமைப்புகளின் வழிநடத்தலுக்கு அமைய செயற்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தோம். புலம்பெயர் அமைப்புகளின் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நாம் இலங்கையில் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களில் நாட்டுக்கு அச்சுறுத்தலான பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புலிகளின் இணையதளங்கள் இலங்கையில் இயங்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் முயற்சிகளை எடுக்கின்றது. சர்வதேச புலிகள் அமைப்புகளுடன் வெளிநாடுகளில் உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் அறிக்கை செப்டெம்பர் மாதமளவில் வெளியிடப்படவிருக்கும் நிலையில் இந்த அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை இலங்கையில் மேற்கொள்ள அனுமதி வழங்கும்.
இலங்கை இராணுவத்தின் மீது பொய்யான போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி எமது இராணுவத்தை தண்டிக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. எமது அரசாங்கம் மிகவும் தெளிவான ிகவும் தெளிவான வகையில் போர்க்குற்ற விசாரணைகளை கையாண்டது. எந்த வகையிலும் எமது ஆட்சியில் கையாண்ட விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறை கூற முடியாது. நாம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். ஆனால் இந்த அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த நோக்கத்துக்காகவே என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply