இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் பகுதிநேர பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அங்கு படித்து கொண்டே பணம் சம்பாதித்து கல்வி செலவை சரிசெய்து வந்தனர். ஆனால் அதற்கு தற்போது அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து இங்கிலாந்து குடியுரிமை மந்திரி ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியதாவது:–

ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு 10 நாட்கள் பகுதி நேரம் பணிபுரியும் உரிமையை இழக்கிறார்கள்.

ஏனெனில் இச்சலுகையை பயன்படுத்தி குடியுரிமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். அதை ஏராளமானவர்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள்.

எனவே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்றி பிறவெளி நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படுகிறது.

அதன்படி கல்வி பயில வருபவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வு மற்றும் நூற்றுக்கணக்கான போலி கல்லூரிகளின் ‘ஸ்பான்சர் ஷிப்’ உரிமைகள் நீக்கம், பகுதிநேர வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் விகிதம் குறைப்பு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

அதன் மூலம் இங்கிலாந்தில் இது போன்று குடியேறுபவர்களின் சலுகைகள் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

வெளிநாட்டு மாணவர்கள் பகுதிநேரம் பணிபுரிய தடை விதிப்பது மட்டுமின்றி அவர்கள் படித்து முடித்த பிறகு மேலும் இங்கு தொடர்ந்து தங்க விசாவுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்று கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே ‘விசா’ மறுசீரமைப்பு நடவடிக்கையால் இந்திய மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களில் 51 ஆயிரம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர் என இங்கிலாந்து உள்துறை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply