மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஆளில்லா விமானத்தை சுட்டுத் தள்ளிய தந்தை கைது
அமெரிக்காவின் கெண்டுக்கி மாநிலத்தைச் சேர்ந்த வில்லியம் எச். மெரிடெத் அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? தன் மகளின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதுதான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் பின்பக்கம் ’சன்பாத்’ எடுத்துக் கொண்டிருந்த வில்லியமின் 2 மகள்களும், அவரிடம் ஓடி வந்து பக்கத்து வீடுகளின் மேலே ஆளில்லா விமானம் ஒன்று பறப்பதை, பதற்றத்துடன் தெரிவித்தனர். வில்லியமின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது இளம்பெண் அப்போது தான், நீச்சல் குளத்தில் குளிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
இருந்தாலும், அடுத்து வரக்கூடிய சட்டப்பிரச்சனைகளை சமயோஜிதத்துடன் யோசித்த வில்லியம், தன் மகள்களிடம் அந்த விமானம் நம் வீட்டிற்கு நேர் மேலாக பறக்கும் வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு, தன் துப்பாக்கியுடன் காத்திருந்தார்.
அவர் எதிர்பார்த்தபடி, சரியாக அவரது வீட்டின் எல்லைக்குட்பட்ட வான்வெளியில் அந்த விமானம் பறக்கத் தொடங்கியதும், சற்றும் யோசிக்காமல் அதை சுட்டு வீழ்த்தினார். ஆனால். ஆயிரத்தி 800 டாலர் (ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம்) மதிப்புள்ள அந்த ஆளில்லா விமானத்தின் உரிமையாளர் வில்லியம் மீது கொடுத்த புகாரையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
தனது நண்பனின் வீட்டை வளைத்து, வளைத்து படமெடுக்கவே அந்த விமானத்தை பயன்படுத்தியதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், வில்லியமோ, இது தனிப்பட்ட நபரின் அந்தரங்கம் சார்ந்த பிரச்சனை என்று கூறியுள்ளார். மேலும் அந்நாட்டு விமான கட்டுப்பாடு சட்டப்படி வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மேல்பரப்பில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தற்போது வில்லியம் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply