ஜப்பான் கடல் எல்லைக்குள் அதிநவீன ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை அமெரிக்கா, தென்கொரியா கடும் கண்டனம்
ஜப்பான் கடல் எல்லைக்குள் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் உள்ளார். அவருடைய அரசாங்கம் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் எல்லையில் ராணுவ குவிப்பையும், அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்கொரியாவுக்கு எல்லையிலும், கடலோர பகுதியிலும் அமெரிக்கா வான் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது. தவிர, தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்துள்ள வடகொரியா இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கடந்த சில வாரங்களாக மிரட்டல் விடுத்து வருகிறது. தவிர கண்டனம் விட்டு கண்டம் பாயும்
அதிநவீன ஏவுகணைகளையும் செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘ரோடோங்’ என்னும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா செலுத்தும் சோதனையில் ஈடுபட்டது.
சுமார் 1,300 கி.மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை எதிரியின் ஏவுகணைகளை ஏமாற்றிவிட்டு கச்சிதமாக இலக்கை தாக்கி அழிக்கும் ‘ஸ்கட்’ ரகத்தைச் சேர்ந்தது.
நேற்று காலை 7 மணி அளவில் இதுபோன்ற 2 ஏவுகணைகளை அடுத்தடுத்து வடகொரியா தனது மேற்கு கடற்கரையோர பகுதியில் ஏவி சோதனை நடத்தியது. முதல் ரோடோங் ஏவுகணை செலுத்தப்பட்ட சில வினாடிகளிலேயே விண்ணில் வெடித்துச் சிதறியது.
பொறுத்துக் கொள்ள முடியாது
2–வது ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று ஜப்பானின் கடல் எல்லைக்கு உட்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் விழுந்தது. நல்லவேளையாக இதில் ஜப்பானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஜப்பான் கடல் எல்லைக்குள் ஏவுகணையை வடகொரியா செலுத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
தனது கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணையை செலுத்தியால் ஜப்பான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுபற்றி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே டோக்கியோ நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த தாக்குதல் எங்களது பாதுகாப்புக்கு வடகொரியா விடுத்துள்ள மிகப்பெரிய மிரட்டல் ஆகும். அத்துமீறிய இந்த செயலை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இனியும் இதுபோல் ஏதாவது நடந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக் கும் வலிமை எங்களிடம் உண்டு’’ என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா, தென்கொரியா கண்டனம்
வடகொரியாவின் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்கா, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடல் பகுதியில் செலுத்தி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என கடுமையாக எச்சரித்து உள்ளது.
“அருகில் உள்ள மற்ற அண்டைய நாடுகளையும் எங்களால் தாக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே வடகொரியா இந்த சோதனையை நடத்தி இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது’’ என்று தென்கொரியா கூறி இருக்கிறது.
வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலால் தென்கொரிய கடல் பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply