சசிகலா சிறைக்கு வெளியே போய் தங்கி இருந்தாரா? புதிய தகவல்களால் சர்ச்சை

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா பற்றி தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்போது அனைவருடைய புருவத்தை உயர வைக்கும் அளவுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

13 நாட்கள் மட்டுமே…

 

சசிகலா பெங்களூரு பரப் பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டு 155 நாட்கள் ஆகிறது.

 

155 நாட்களில் வெறும் 13 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருந்தார் என்றும் மற்ற நாட்களில் சிறை அருகே அவரது உறவினர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. தன்னை உறவினர்கள் பார்க்க வரும் நாட்களில் மட்டும் அவர் சிறைக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

 

முதல் கட்ட விசாரணையில்…

 

பொதுவாக சிறையில் கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் சசிகலாவை அவரது உறவினர்கள் இந்த நேரத்தை தாண்டியும் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவணங்கள் டி.ஐ.ஜி. ரூபாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த ஆவணங்களை உயர்மட்ட குழுவின் விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் ரூபா வழங்க உள்ளதாக தெரிகிறது.

 

வினய்குமார் முதல் கட்ட விசாரணை அறிக்கையில் இடம் பெறும் தகவல்கள் அடிப்படையில் சசிகலாவை துமகூருவுக்கோ அல்லது மைசூரு சிறைக்கோ மாற்ற அரசு முடிவு எடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கையை அடுத்த சில நாட்களில் அரசுக்கு வினய்குமார் தாக்கல் செய்ய உள்ளார்.

 

பெங்களூரு சிறை சூப்பிரண்டு அனிதாராய் இடமாற்றம்

 

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையின் தலைமை சூப்பிரண்டாக கிருஷ்ணகுமாரும், சிறை சூப்பிரண்டாக அனிதாராயும் இருந்தார்கள். இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது. சிறையில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறையின் தலைமை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு பதிலாக புதிய தலைமை சூப்பிரண்டாக அனிதாராய் நியமிக்கப்பட்டார்.

 

ஆனால் அவரை தலைமை சூப்பிரண்டாக நியமித்ததை கண்டித்து சிறை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அனிதாராயிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தலைமை சூப்பிரண்டாக சோமசேகர் நியமிக்கப்பட்டார்.

 

ஆனாலும் பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக அனிதாராய் தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த அனிதாராயை அதிரடியாக கர்நாடக அரசு நேற்று பணி இடமாற்றம் செய்தது. அவர் தார்வார் சிறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

தார்வார் சிறை சூப்பிரண்டாக இருந்த ரமேஷ், பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆய்வு

 

சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட மேகரிக் நேற்று மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு நடத்தினார். சிறையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தியதுடன், சில கைதிகளிடமும், சிறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார்.

 

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

 

“கர்நாடக சிறைத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்ற பின்பு, பெங்களூரு சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினேன். சிறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவதால், அதுகுறித்தும் விசாரணை நடத்தினேன். சில கைதிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களையும், அவர்கள் சொல்லிய குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டேன்.

 

அதே நேரத்தில் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அவர்களிடமும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி, சில தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளேன்.

 

விசாரணை அதிகாரிக்கு, சிறைத்துறையின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

வா.புகழேந்தி பேட்டி

 

டி.டி.வி.தினகரனுடன் வந்து இருந்த கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணி செயலாளர் வா.புகழேந்தி பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

 

எனக்கும், முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர் மூலமாக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் என் மீது சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தவறானது.

 

எனக்கும், பரமேஸ்வருக்கும் இடையே 25 ஆண்டுகளாக நட்பு உள்ளது. ஆனால் அதை நான் பயன்படுத்தி சசிகலாவுக்கு சிறையில் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சமீபத்தில் நான் பரமேஸ்வரை சந்திக்கவே இல்லை. அவரை நான் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

 

இவ்வாறு வா.புகழேந்தி கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply