சவுதியின் பெண் சாரதி அனுமதிக்கு ஐ.நா., அமெரிக்க என்பன வரவேற்பு
சவுதி மன்னர் ஸல்மான் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதிக்கும் ஆணையைப் பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் அனுமதி மறுப்பதில் உள்ள பிரதிகூலங்களும் அனுமதிப்பதில் உள்ள அனுகூலங்களுமே இம்முடிவுக்குக் காரணம் என அந்நாட்டு அரசு அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் மூத்த இஸ்லாமிய அறிஞர் பேரவை பெண்கள் வாகனம் ஓட்டுவது அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட விடயம் என மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடுவதற்காக பொது மைதானங்களில் ஒன்று கூடவும், இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதன் பிறகே அவர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வனுமதிகளைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை முதன் முறையாக விளையாட்டு மைதானம் ஒன்றில் பெண்கள் பெரும் திரளாக ஒன்று கூடினர். அத்துடன் அவர்கள் நடனத்துடன் இசைநிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்திருந்தனர்.
இவ்வனுமதி குறித்து சவுதி அரேபியாவுக்கான அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான், கூறுகையில்,
‘இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள்’ என்றும், சரியான முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் வாகனம் ஓட்ட பயிற்சி எடுப்பதற்கு தங்கள் வீட்டு ஆண்களின் அனுமதியை பெண்கள் பெற தேவையில்லை என்றும், அவர்கள் விரும்பும் எந்த இடத்துக்கும் அவர்கள் வாகனம் ஒட்டிச் செல்லலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் சஊதி அரேபியாவின்; இம்முடிவை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனி கட்டெரஸ் உட்பட அதிகமான மேற்குநாடுகள் பெரிதும் வரவேற்றுள்ளன. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்று அமெரக்க அரச துறை தெரிவித்துள்ளது.
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான இவ்வனுமதி 2018 ஜூன் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமகால அறிஞர் கலாநிதி யுசுப் அல் கர்ளாவியினால் 2011 ஆம் ஆண்டு பெண்கள் வாகனம் செலுத்தலாம் என வெளியிடப்பட்ட கருத்து, சவுதியினால் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply