அமெரிக்காவின் கென்டகி மாகாண பள்ளியில் துப்பாக்கி சூடு : 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள பள்ளியில் 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 மாணவர்கள்  பலியாகினர். இதில் 19 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள மார்ஷல் கவுன்டி பள்ளியில் படிக்கும் 15 வயதான மாணவர் ஒருவர் நேற்று பள்ளிக்கு நுழைந்தார். அங்கு நுழைந்த அவர், கண்ணில் தெரிந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் மற்றொரு மாணவர் இறந்தார். மேலும், இதில் 19க்கு மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மார்ஷல் கவுன்டி பள்ளியில் ஒரு மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். தகவலறிந்து அங்கு 12-க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து சென்றன. படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளோம். துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக அவரிடம் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் டெக்சாஸ் மாகாணத்தின் பாப்டிஸ்ட் சர்ச் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply