டொரியன் புயல் கோரத்தாண்டவம் : பகாமாசில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் தொடர்ந்து கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

இந்த புயல் மழைக்கு 7 பேர் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 20 பேர் வரை இறந்தது உறுதி செய்யப்பட்டது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை பிரதமர் ஹூபர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 70 ஆயிரம் பேருக்கு உடனடியாக நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. கூறி உள்ளது.

தற்போது டொரியன் புயலானது, இரண்டாம் வகை புயலாக மாறி, அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினாவை தாக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply